ஆன்லைன் ரம்மியால் 2 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த இளைஞர், திடீரெனச் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அரிசிபாளையம் முள்ளாகாடு தமணன்சாலை பகுதியை சேர்ந்தவர்கள் மகாலட்சுமி – முத்துராமன் தம்பதி. இவர்களுக்கு குணசீலன் (26), பசுபதி (25), கமல் (23) ஆகிய மகன்கள் உள்ளனர். குணசீலன் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அப்போது அவர் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட ஆரம்பித்தவர், நாளடைவில் அதற்கு முழுமையாக அடிமையாக தொடங்கியுள்ளார். இதனால் கல்லூரிக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளார். இதையடுத்து, குணசீலனின் தம்பி பசுபதி அண்ணனுக்கு ரூ.50 ஆயிரம் பணத்தை கடனை அடைக்க கொடுத்ததோடு, ஒரு உணவகத்தில் பணிபுரிவதற்காக அழைத்து வந்து பணியில் சேர்த்துள்ளார். அங்கு கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வந்த குணசீலன் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த நிலையிலும், தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதனால், மேலும் அதிக அளவிலான பணத்தை இழந்த குணசீலன் பல்வேறு நபர்களிடம் கடனை வாங்கி அதன் மூலமாகவும் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் அதிகளவிற்கான பணத்தை இழந்து விட்டதாக தனது சக பணியாளர்களிடம் தெரிவித்து புலம்பியுள்ளார். இதனால் ஏற்பட்ட அதிக மன உளைச்சல் காரணமாக சாத்தமங்கலம் 1-வது தெருவில் அவர் தங்கியிருந்த வீட்டில் நேற்று மாலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி இறுதியாண்டு படித்து வந்த குணசீலன், கடைசி செமஸ்டர் எழுதமலேயே இப்படியொரு நிலையை தேடிக்கொண்டது அப்பகுதி மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குண சீலனின் தம்பி பசுபதி எதேச்சயாக அண்ணன் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த போது அவர் சடலமாக தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குணசீலனின் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.