பீகார் அரசு வாட்ஸ்அப், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட 23 சமூக ஊடக செயலிகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
பீகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள முபாரக்பூர் என்ற கிராமத்தில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.. இதனால் நேற்று முன் தினம் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூடி, விஜய் யாதவ் என்ற அந்த கிராமத் தலைவரின் வீட்டிற்குள் நுழைந்ததால், அங்கு பதற்றம் நிலவியது. மேலும் அவர்கள் கிராமத் தலைவரின் வீடு மற்றும் கோழிப் பண்ணைக்கு தீ வைத்தனர். அந்த கிராமத் தலைவரும் அவரது உதவியாளர்களும் 3 இளைஞர்களை கொடூரமாக தாக்கியதாகவும் அதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் இருவர் படுகாயமடைந்ததாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்..
இந்நிலையில் பீகாரின் சரண் மாவட்டத்தில் வாட்ஸ்அப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட 23 சமூக ஊடக செயலிகளுக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது. வரும் 8-ம் தேதி இரவு 11 மணி வரை அங்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக பீகார் அரசு தெரிவித்துள்ளது… அந்த மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சரண் மாவட்டத்தில் உள்ள சில சமூகவிரோதிகள், பொதுமக்கள் மத்தியில் வதந்திகளையும் அதிருப்தியையும் பரப்புவதற்காக, இணைய ஊடகத்தைப் பயன்படுத்தி, ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தைப் பரப்புவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..