வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக ஆயுதப்படை போலீசாரிடம் சிபிசிஐடி நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணை, போலீஸ் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் டிசம்பர் 26ஆம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான போலீசார், கடந்த 3 தினங்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 7ஆம் தேதி வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த ஆயுதப்படை காவலர் முரளிராஜா உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் 2 ஆயுதப்படை காவலர்களிடமும், நேற்று 4 ஆயுதப்படை காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சாராத இவர்கள் அனைவரும் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த காவலர் முரளிராஜாவின் வாட்ஸ்அப் குழு நண்பர்கள். இவர்கள் 6 பேரும், வேங்கைவயல் சம்பவம் தொடர்பான பல்வேறு பதிவுகளை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்ததும், குழுவில் இருந்த தகவல்களை பல்வேறு குழுக்களுக்கு ‘பார்வர்டு’ செய்ததும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு இருக்கிறதா? அல்லது சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை இவர்களுக்கு தெரிந்திருக்கிறதா? என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக, புதுக்கோட்டை ஆயுதப்படை போலீசாரிடம் சிபிசிஐடி நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணை, போலீஸ் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 ஆயுதப்படை காவலர்களையும் சேர்த்து, இவ்வழக்கில் இதுவரை, 98 பேர் விசாரிக்கப்பட்டு உள்ளனர்.