கள்ளக்காதல் விவகாரத்தில் பீகார் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜார்கண்ட் மாநில தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பவன் யாதவ் (27). இவர், திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் உபேந்தரதாரி (50) குடும்பத்துடன் தங்கி அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், உபேந்தரதாரி மனைவி சித்ராதேவியுடன் பவன் யாதவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக உபேந்தரதாரி பவன் யாதவ் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரடைந்த உபேந்தரதாரி தான் கையில் வைத்திருந்த அரிவாளால் பவன் யாதவை தலை, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பவன் யாதவை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பவன் யாதவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய உபேந்தரதாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.