சென்னையில் வாடகைக்கோ அல்லது லீசுக்கோ நல்ல வீடு அமைவது என்பது மிகப்பெரிய வரம். வாடகையோ, லீசு எவ்வளவாக இருந்தாலும், தனிவீடாக இருந்தால் மக்கள் அதிகம் விரும்புவார்கள். ஆனால், அப்படி கிடைப்பது கடினம். மக்களின் இந்த தேவைகளை புரிந்து கொண்டு சரியாக சேவை செய்யும் ரியல் ஸ்டேட் புரோக்கர்கள் சென்னையில் அதிக அளவில் இருக்கிறார்கள். ஆனால் அதேநேரம் ஒரு சில புரோக்கர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு சில தில்லாலங்கடி வேலைகளை செய்வது உண்டு. அப்படித்தான் சென்னை சேலையூரில் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் செய்த செயல் சென்னை தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.
சென்னை கிழக்கு தாம்பரம் ஆதி நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (37). இவர் வீட்டு புரோக்கர். புறநகர் பகுதியான தாம்பரம், பல்லாவரம், சிட்லப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள வீட்டு உரிமையாளர்களை தொடர்பு கொள்ளும் தங்கராஜ், தன்னிடம் வாடகைக்கு ஆள் உள்ளதாக கூறுவார். இதை நம்பி வரச்சொல்லும் வீட்டின் உரிமையாளர்களிடம், வாடகையில் 1,000 ரூபாயை வாடகைதாரர்களிடம் கூடுதலாக கூறி, அதை தான் பெற்றுக் கொள்வதாகவும் வீட்டு உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்த வீடுகளை, ‘ஆன்லைன்’ மூலம் வாடகை மற்றும் குத்தகைக்கு விளம்பரமும் செய்திருக்கிறார்.
விளம்பரத்தை பார்த்து, புரோக்கர் தங்கராஜை பலரும் தொடர்பு கொண்டு, வீடுகளை கேட்டுள்ளனர். அப்படி வருவோரிடம், ஆண்டு குத்தகைக்கு பேசி ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை பெற்று, வீடுகளை விட்டுள்ளார். அதேநேரத்தில், வீடுகளை குத்தகைக்கு விட்டது தெரியாமல் இருக்க, மாதந்தோறும் தானே வாடகை தொகையை வசூலிப்பது போல் வீட்டு உரிமையாளர்களிடம் தொகையை கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பான புகாரில் தற்போது தங்கராஜை காவல்துறையினர் கைது செய்தனர்.