மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது போலவே கடைசி போட்டியிலும் நடக்கும் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ள நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியிலும் அவரே கேப்டனாக தொடருவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில், முன்னணி வீரர்கள் இடம்பெறாத வேளையில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பினையும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பு உறுதியாகும் என்ற நிலை உள்ளது. 3வது டெஸ்ட் போட்டி முடிந்து பேசிய ஆஸி.கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது போலவே கடைசி போட்டியிலும் நடக்கும் என்றும் நிச்சயம் இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முயற்சிப்போம் என்று இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில்,இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாட் கம்மின்ஸ் தனது குடும்பத்தினருடன் இருப்பார். அவர் 4 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.