விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய பின்னர் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும் குரூப் 1 குரூப் 2 இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியிலிருந்து 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். அதேபோல் இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிக்கு நள்ளிரவு 12 மணி முதல் காலை ஆறு மணி வரையிலும், குரூப் 2 பகுதிக்கு இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
அதே போல டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும் குரூப் 1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து 3 மணி வரையிலும், இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மேலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப் 2 பகுதிக்கு காலை 9:30 மணியில் இருந்து மதியம் 3.30 மணி வரையிலும், இரவு நேரத்தில் 10 மணியிலிருந்து விடியற்காலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.