தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (45). இவரது மனைவி செல்வி (35). இவர்கள் தற்போது பரமத்திவேலூரை அடுத்த வேட்டுவங்காடு பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இரவு மனைவி செல்வியிடம் மாதேஷ் மது வாங்குவதற்காக பணம் கேட்டுள்ளார். அப்போது செல்வி பணம் கொடுக்க மறுத்து விட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மாதேஷ், அங்கிருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போது, வலி தாங்க முடியாமல், செல்வி கத்தியதால் அக்கம்பத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வியை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தாலி கட்டிய மனைவி குடிக்க பணம் தராததால் கணவர் அரிவாளால் வெட்டி சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.