திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணை திருநங்கை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்தவர் சலூரி அஞ்சலி. 21 வயதான இவர் மஞ்சரியால் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். இவருடன் பரமேஸ்வரி என்ற பெண்ணும் பணியாற்றி வந்திருக்கிறார். பரமேஸ்வரிக்கு மகேஸ்வரி என்ற திருநங்கை சகோதரி ஒருவர் இருக்கிறார். இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். பரமேஸ்வரி மூலமாக அஞ்சலிக்கு மகேஸ்வரிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இவர்கள் மூவரும் ஒரு அறை எடுத்து தங்கி வந்திருக்கின்றனர் .
அஞ்சலி மீது மகேஸ்வரிக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அஞ்சலியை வற்புறுத்தி வந்திருக்கிறார் மகேஸ்வரி. ஆனால் அஞ்சலி தொடர்ந்து இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு அஞ்சலி மற்றும் மகேஸ்வரிக்கு இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மகேஸ்வரி கத்தியால் அஞ்சலியை குத்தியுள்ளார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அஞ்சலியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக அஞ்சலியின் குடும்பத்தை தொடர்பு கொண்ட விக்னேஷ் என்ற நபர் அஞ்சலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை தெரிவித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் பதறியடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஞ்சலி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மகேஸ்வரியை கைது செய்த காவல்துறை அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அஸ்மீர் ஸ்ரீநிவாஸ் என்ற நபர் மீதும் சந்தேகம் இருப்பதாக அஞ்சலியின் பெற்றோர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.