உலகளவில் அதிகளவில் பெருகிய தொழிற்சாலைகள், காடுகளை அழித்தல், நீர் நிலைகளை அழித்தல் போன்ற காரணங்களால் பூமி இயல்பை விட வேகமாக வெப்பமடைகிறது.. இதனால் பனிப்பாறைகள் நாம் முன்பு கணித்ததை விட அதிகமாக உருகுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.. இதன் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதுடன், கடற்கரையோர நகரங்கள் நீரில் மூழ்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலை விளக்கும் வகையில் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில் ” காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் வாழ்வாதாரங்கள், ஆரோக்கியம் மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வை அச்சுறுத்துகிறது. இந்த தசாப்தத்தில் செயல்படுத்தப்படும் முடிவுகள் மற்றும் செயல்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தாக்கத்தை ஏற்படுத்தும். காலநிலை மாற்றம் மனித நல்வாழ்வு மற்றும் பூமியின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த அறிக்கை வெளியான நிலையில், ஐ.நா சபை முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கும், அனைவருக்கும் ஏற்ற நிலையான எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.. ஐ.நா சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இதுகுறித்து பேசிய போது “ மனிதகுலம் மெல்லிய பனியில் உள்ளது.. அந்த பனி வேகமாக உருகி வருகிறது. நம் உலகை பாதுகாக்க, எல்லா இடங்களிலும், ஒரே நேரத்தில் காலநிலை நடவடிக்கை தேவை” என்று கூறினார்.

காலநிலை நெருக்கடியில் நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்த அன்டோனியோ குடெரெஸ், கடந்த 200 ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்து உலக வெப்பத்திற்கும் மனிதர்களே பொறுப்பு என்று கூறினார். மேலும் “ கடந்த அரை நூற்றாண்டில் வெப்பநிலை உயர்வு விகிதம் 2,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக உள்ளது.. கார்பன் டை ஆக்சைட்டின் செறிவு குறைந்தது இரண்டு மில்லியன் ஆண்டுகளில் மிக அதிகமாக உள்ளது. இன்றைய IPCC அறிக்கையானது காலநிலை நேர வெடிகுண்டை எவ்வாறு செயலிழக்க செய்வது என்பது பற்றிய வழிகாட்டியாகும். இது மனிதகுலத்திற்கான உயிர்வாழும் வழிகாட்டியாகும்..
நான் G20 நாடுகளுக்கு ஒரு காலநிலை ஒற்றுமை ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளேன்.. மேலும் பணக்கார நாடுகள் 1.5 டிகிரி அளவு உலக வெப்ப நிலையை குறைக்க ஒரு பொதுவான முயற்சியில் வளர்ந்து வரும் நாடுகளை ஆதரிக்க நிதி மற்றும் தொழில்நுட்ப வளங்களைத் திரட்டுகின்றன,” என்று தெரிவித்தார்..
2018 ஆம் ஆண்டில், பூமியின் வெப்பநிலையை 1.5°C வரை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று IPCC சுட்டிக்காட்டியது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, பசுமை இல்ல வாயு வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த சவால் இன்னும் அதிகமாகிவிட்டது. காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க, இதுவரை மேற்கொள்ளப்பட்ட வேகமும், அளவும், தற்போதைய திட்டங்களும் போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.