சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான நகைக்கடையின் ஷட்டரில் வெல்டிங் மெஷினால் துளையிட்டு உள்ளே ஒரு கும்பல் நுழைந்துள்ளது. பின்னர் கடையின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் மதிப்பிலான வைரங்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். மேலும், கடையிலிருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்கும் திருடப்பட்டிருந்தது. இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் பெங்களூரூவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கங்காதரன், ஸ்டீபன் ஆகிய இரண்டு பேருக்கிடையே மோதல் ஏற்பட்டது. அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் தான் பெரம்பூர் நகைக்கடை கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளையடித்த இரண்டரை கிலோ தங்க நகையைப் பங்கு பிரிப்பதில் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், இது குறித்து தமிழக போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். கர்நாடகாவில் முகாமிட்டிருந்த தமிழக போலீசார் உடனே அங்கு விரைந்தனர்.
கைதானவர்கள் கொடுத்தத் தகவலின்படி, அவர்களது கூட்டாளிகள் கஜேந்திரன், திவாகர் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் திருடிய தங்க நகைகள் குறித்து விசாரணை செய்தபோது, கங்காதரன் தன்னுடைய மனைவி கீதா (26), மைத்துனர் ராகவேந்திரர் (25) ஆகியோரிடம் நகைகளைக் கொடுத்தது தெரியவந்தது. அவர்கள் இருவரும் திருடிய தங்க நகைகளை உருக்கிப் பணமாக்கி, அதில் ஆடம்பர கார் வாங்கி சொகுசாக வாழ்க்கை வாழ தொடங்கி விட்டனர். இதையடுத்து, இருவரையும் பிடித்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 சொகுசு கார்கள், 400 கிராம் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்தக் குற்ற வழக்கில் தலைமறைவாக இருக்கும் அருண், கவுதம் ஆகிய இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த நகையில் இதுவரை 5.1 கிலோ தங்கத்தை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.