ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட விவரத்தை அனுப்புமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஆ. சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ”சென்னை உயர்நீதிமன்ற ஆணையில் தகுதியுள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்றவாறு மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையம் மூலம் நிரப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தங்கள் மண்டலத்தில் பணிபுரியும் தகுதியுள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட விவரத்தினை அனுப்பி வைக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள், கட்டுநர் பதவிகளுக்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட கூட்டுறவுத் துறை ஆட்சேர்ப்பு நிலையங்கள் வெளியிட்டன. இந்த அறிவிப்பின் மூலம் மாநிலம் முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டன. இதற்கான, நேர்காணல் தேர்வு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. நேர்காணல் தேர்வு நடைபெற்று கிட்டத்தட்ட 3 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், நியாய விலைக் கடைகளில் ஏற்கனவே பணிபுரிந்து வரும் விற்பனையாளர்கள், கட்டுநர் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.