திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பூச்சி அத்திப்பேடு கள்ளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (60). இவர் அலமாதி பால்பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கும் எடப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த எஸ்தர் (42) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. எஸ்தரும், எஸ்தரின் இளைய மகள் தீபிகா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர் அருகருகே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மணிகண்டனுக்கு மாமியார் எஸ்தரின் கள்ளக்காதலன் மீது கடும் கோபம் இருந்துள்ளது. இந்நிலையில், முத்துகிருஷ்ணன் வழக்கம் போல் எஸ்தர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் எதிரே இளநீர் சாப்பிட்டுக் கொண்டிருந்த மணிகண்டன் (28) முத்துக்கிருஷ்ணன் தன் மாமியார் வீட்டிற்கு சென்றதை பார்த்து ஆத்திரமடைந்தார்.
இதையடுத்து, உடனடியாக மாமியாரின் வீட்டிற்கு சென்ற மணிகண்டன், முத்து கிருஷ்ணனிடம் ஏன் என்னுடைய மாமியார், மனைவியிடம் பேசுகிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் போதையில் இருந்த அவர், ஆத்திரத்தில் இளநீர் வெட்டும் கத்தியால் முத்துகிருஷ்ணனின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த முத்துக்கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர்.