கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீதர் ராய் சாலையில் வசிக்கும் 7 வயது சிறுமி நேற்று அதிகாலையில் இருந்து காணவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், நேற்று மதியம் 12 மணியளவில் தில்ஜாலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால், அந்த சிறுமி பற்றி தகவல் கிடைக்கவில்லை. சிசிடிவி காட்சியில் காணாமல் போன சிறுமி அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் தேடுதலில் ஈடுபட்ட போலீசார் எந்த தடயமும் கிடைக்கவில்லை என கூறியது. நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, மாலையில் பக்கத்து வீடு பூட்டியிருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். அவர்கள் பூட்டை உடைத்து பார்த்தபோது, காணாமல் போன சிறுமியின் உடல் சாக்கு மூட்டையில் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
2-வது மாடியில் இருக்கும் அலோக் குமார் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பில் சடலம் கண்டெடுக்கப்பட்டதை கொல்கத்தா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அலோக் குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 7 வயது சிறுமியை கொலை செய்வதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சிறுமியின் தலை மற்றும் காதில் காயங்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இது குறித்த முழு விவரம் தெரியவரும் என கூறியுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினரின் அலட்சியத்தால் தான் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.