சென்னை காரப்பாக்கம் கந்தசாமி நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் மல்லிகா (40). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், இவரது மூத்த மகனும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இளைய மகன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், மல்லிகா தனது கணவன் இறந்த பிறகு, முருகன் என்பவரை 2-வதாக திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கும், மல்லிகாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வந்தது. முருகன் வீட்டில் இல்லாத நேரத்தில் ஜெயக்குமார் மல்லிகாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் மல்லிகாவைப் பார்க்க அவரது இளைய மகன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது முகம் மற்றும் தலையில் பலத்த வெட்டு காயத்துடன் மல்லிகா இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணையில், சம்பவத்தன்று இரவு மல்லிகா வீட்டிற்கு கள்ளக்காதலன் ஜெயக்குமார் வந்துள்ளார். அப்போது இருவரும் மது அருந்தியுள்ளனர். அதற்கு பிறகுதான் மல்லிகா இறந்துள்ளது தெரியவந்தது. எனவே, குடிபோதையில் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட தகராறில் மல்லிகா கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஜெயக்குமாருடன் ஜாலியாக இருந்ததை பார்த்து ஆத்திரத்தில் கணவர் முருகன் கொலை செய்தாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், தலைமறைவாக உள்ள கணவர் முருகன் மற்றும் கள்ளக்காதலன்ஜெயக்குமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.