ஹைதராபாத்தில் உள்ள செலோன் லேப்ஸ் நிறுவனம் தயாரித்த புற்றுநோய் மருந்துகளில் உயிருக்கு ஆபத்தான பாக்டீரியா, சூடோமோனாஸ் போன்றவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியதாவது: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த செலோன் லேப்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மெத்தோட்ரெக்ஸேட், கீமோதெரபி ஊசி மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்கும் மருந்து உட்பட நான்கு மருந்துகள் தரமற்றவையாகவும் அசுத்தமாகவும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செலோன் லேப்ஸ் நிறுவனத்தின் மெத்தோட்ரெஸ் (Methotrex 50mg) ஊசி குறித்து எச்சரிக்கை கடிதம் ஒன்றை உலக சுகாதார நிறுவனம் அனுப்பியுள்ளதாக தெரிவித்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், மேற்கு ஆசிய நாடுகளான ஏமன் மற்றும் லெபனானில் இருந்து இந்தப் புகார் எழுந்துள்ளதாகவும் கூறினார்.
இந்த ஊசியினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏமன் மற்றும் லெபனான் நாடுகளின் சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின் முடிவில் இந்த ஊசி மருந்து மாசுபட்டிருப்பதைக் கண்டறிந்த அதிகாரிகள், இந்த ஊசியை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளின் நோயெதிர்ப்பு அமைப்புகள் பலவீனம் அடைந்துள்ளது. இதனால் அவர்கள் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகும் அபாயம் அதிகம்” என்று கூறியதாக WHO அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரமற்ற மருந்துப் பொருட்கள் கள்ளச்சந்தை வாயிலாக ஏமன் மற்றும் லெபனான் நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று கருதவதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
மேலும், MTI2101BAQ என்ற மருந்து இந்தியாவில் மட்டுமே விற்கப்பட வேண்டும். ஆனால், இவ்விரு நாடுகளும் ஒழுங்குபடுத்தப்பட்ட மருந்து விநியோகச் சங்கிலிக்கு வெளியிலிருந்து இந்த மருந்துகளைக் கொள்முதல் செய்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தைப்படுத்த அனுமதிக்கப்படாத தயாரிப்புகளுக்கான பாதுகாப்பிற்கு உற்பத்தியாளரால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று WHO தெரிவித்துள்ளது. ஏமன், லெபனான் போல வேறு நாடுகளுக்கும் இந்த மருந்துகள் கள்ளச் சந்தையில் விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது