தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்போர் கடந்த ஜனவரி 1ஆம் தேதியுடன் 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். அவரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் தகுதியுடைய தமிழறிஞர்களுக்கு ரூ.3,500 உதவித் தொகை வழங்கப்படும். மேலும், மருத்துவ படியாக வாரந்தோறும் ரூ.500 வழங்கப்படும். இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மண்டல தமிழ் வளர்ச்சித் துறையின் துறை இயக்குனர்கள் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.