திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர், ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேனி (42). தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோபிக்கும், அதே பகுதியில் வசித்து வரும் அவரது அண்ணன் ராஜாங்கத்துக்கும் இடையே 2 ஏக்கர் பூர்வீக சொத்தை பாகப் பிரிவினை செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வழக்கறிஞரை சந்திப்பதற்காக கிருஷ்ணவேனி திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளார். உலுப்பக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பேருந்தில் கிருஷ்ணவேனி ஏறுவதை பார்த்து, அதே பேருந்தில் ராஜாங்கமும் தனது 14 வயது மகனுடன் ஏறியுள்ளார். இந்நிலையில், ராஜாங்கம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணவேனியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். உடனடியாக பேருந்து ஓட்டுநர் விஜய் பேருந்தை நிறுத்தியதை அடுத்து, ராஜாங்கம், மகனை விட்டுவிட்டு பேருந்திலிருந்து இறங்கி தப்பி ஓடினார்.
இந்நிலையில், பலத்த காயமடைந்த கிருஷ்ணவேனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணவேனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.