நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி, கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, குமரி, ராணிப்பேட்டை, கோவையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.