தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரையின் தொடக்க நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.. இது சித்திரை பிறப்பு, வருடப்பிறப்பு, தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை விஷு என பல பெயர்களால் கொண்டாடப்படுகிறது.. அதன்படி இன்று ஏப்ரல் 14-ம் தேதி சுபகிருது வருடம் முடிந்து சோபகிருது ஆண்டு பிறக்கிறது.. சித்திரை 1, (2023 ஏப்.14) வெள்ளிக்கிழமை, தேய்பிறை நவமி, திருவோண நட்சத்திரம், கடக லக்னம், மீன நவாம்சம் கூடிய சுப நாளில் மதியம் 2:05 மணிக்கு தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. இந்த ஆண்டில் பொறாமை, கோபம், ஆணவம் நீங்கி நற்பண்புகள் உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மழை பெய்யும். மகிழ்ச்சியுடன் மக்கள் வாழ்வர் என்று நம்பப்படுகிறது..
பொது பலன்கள்: வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். அந்நிய முதலீடுகள் அதிகரிப்பதோடு மட்டுமின்றி கனரகத் தொழில்கள் வளர்ச்சி பெறும். முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவர். உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். நவீன ஏவுகணைகள் , புதிய வகை விமானங்கள், போர்க் கருவிகள் வாங்கப்படும். நம் நாட்டின் செல்வாக்கு அதிகரிக்கும்.
விவசாயம் செழிக்கும். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை ஏறும். உணவு உற்பத்தி அதிகரிப்பால் ஏற்றுமதி பெருகும். கல்வித்துறையில் சீர்திருத்தம் ஏற்படும். தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். விளையாட்டு வீரர்கள் சாதனை படைப்பர். அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேஷியா நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும்.
தமிழ்ப்புத்தாண்டன்று விஷுக்கனி தரிசனம் செய்வது சிறப்பாகும். இதற்காக பூஜையறையில் மாக்கோலமிட்டு மரப்பலகை மீது நிலைக்கண்ணாடியை வைத்து, இருபுறமும் விளக்கு ஏற்ற வேண்டும்.. பூக்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பச்சரிசி, பருப்பு வகைகளை தட்டுகளில் நிரப்பி வைக்க வேண்டும். மா, பலா, வாழை என முக்கனிகளுடன் மற்ற கனிகளையும் கொன்றைப்பூக்கள் அல்லது மஞ்சள்நிற செவ்வந்தி, தென்னம்பூக்களையும் அடுக்க வேண்டும். அதிகாலையில் இதைக் காண்பதற்கு ‘சித்திரை கனி தரிசனம்’ என்று பெயர்.
அதன்பின் பெற்றோரிடம் ஆசி பெற்று பணம் பெறவர். இதனைக் ‘கை நீட்டம்’ என்பர். இப்படி செய்தால் ஆண்டு முழுவதும் வளமான வாழ்க்கை அமையும். தமிழ் புத்தாண்டின் முதல் நாள் அதிகாலை சித்திரை கனி தரிசித்தால் ஆண்டு முழுவதும் ஆனந்தமாக அமையும். மேலும் தமிழ் புத்தாண்டு மதிய உணவில் வெல்லம், மாங்காய் சேர்த்த வேப்பம்பூ பச்சடி இருக்க வேண்டும் என்பது ஐதீகம்..