’கல்யாணம் பண்ணா உன்ன தான் பண்ணுவேன்’..!! கட்டுக்கட்டாக பொய்யை அவிழ்த்துவிட்டு பலே மோசடி..!!

குர்கானில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த 26 வயது இளைஞர், திருமண இணையதளங்களில் பெண்களிடம் மோசடி செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்லைனில் பெண்களின் நம்பிக்கையை பெறுவதற்காக தன்னை செல்வாக்கு மிக்கவராக காட்டிக்கொண்ட இவர், தன்னிடம் பழகிய பெண்களிடம் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி, பணத்தை பெற்று, பின் அவர்களைக் கழற்றிவிட்டுவிடுகிறார் என போலீசார் கூறுகின்றனர். இந்த இளைஞரின் பெயர் விஷால் என்றும் டெல்லியில் எம்பிஏ முடித்தவர் என்பது தெரியவந்துள்ளது.


இவர் மேட்ரிமோனி தளத்தில் தன்னை பணக்கார இளைஞர் போலக் காட்டிக்கொள்கிறார். பின்னர், பெண்களின் நண்பராகி, அவர்களைக் கவர்ந்ததும் மலிவான விலையில் ஐபோன்களை விற்பனை செய்வதாக பணத்தைப் பெற்று ஏமாற்றுகிறார். இப்படி மோசடி செய்து எளிதாக பணம் பார்க்கத் தொடங்கியதும், அந்தப் பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த இளைஞர் மீது குர்கானைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரிடம் இருந்து புகார் வந்தது. அந்தப் பெண்ணின் பெற்றோர், மகளுக்கு திருமண வரன் தேடுவதற்காக மேட்ரிமோனியல் தளத்தில் பெண்ணின் புரொஃபைலை உருவாக்கியுள்ளனர். விஷால் ஆண்டுக்கு ரூ.50-70 லட்சம் வருமானம் ஈட்டுவதாக கூறுவதைப் பார்த்து அவரிடம் பேசியுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் மூலம் அந்தப் பெண் விஷாலுடன் பேசியிருக்கிறார். விஷால் குர்கானில் சில வில்லாக்கள் மற்றும் பண்ணை வீடுகளைக் காட்டி அவை தனக்குச் சொந்தமானவை என்று கூறியிருக்கிறார். அப்பாவித்தனமாக அதனை நம்பிய அந்தப் பெண்ணின் குடும்பத்தினரின் அவரைச் சந்தித்து சம்பந்தம் பேச முடிவு செய்துவிட்டனர். இந்தச் சூழலில் விஷால் தான் மலிவான விலையில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் விற்பனை செய்வதாகக் கூறி, அதை வாங்கிக்கொள்ளும்படி அந்தப் பெண்ணை வற்புறுத்தியுள்ளார். விஷாலின் வார்த்தை ஜாலங்களை நம்பிய அந்தப் பெண், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் சேர்த்து ஐபோன் வாங்கித் தரும்படி கேட்டு, ரூ.3,05,799 பணத்தை விஷாலுக்கு அனுப்பியுள்ளார். பணம் பல்க்காக வந்ததும் தன் வேலையைக் காட்ட தொடங்கிவிட்டார் விஷால். தான் ஒரு விபத்தில் சிக்கி ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறிவிட்டு, போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார் விஷால். அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில், அந்தப் பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துகொண்டார்.

பின்னர் அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேட்ரிமோனியல் இணையதளத்தில் இவரிடம் ஒரு பெண்ணைப் பேசவைத்து சோதித்துப் பார்த்த போலீசார், இவர் தனது வழக்கமான பார்முலாவை பயன்படுத்தியபோது சிக்கிக் கொண்டார். இதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், விஷால் 2021ஆம் ஆண்டு தனது வேலையை விட்டுவிட்டு குர்கானில் ஒரு உணவகத்தைத் தொடங்கியதும், தொழில் வெற்றி அடையாமல் படுத்துவிட்டதால், பின்னர் மேட்ரிமோனி தளங்களில் பெண்களை ஏமாற்ற ஆரம்பித்ததும் தெரியவந்தது. விஷால் சில சமயங்களில் பெண்களைச் சந்திக்கும்போது அவர்களை மயக்குவதற்காக ஒரு நாளைக்கு 2,500 ரூபாய் செலவு செய்து சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்ததாவும் போலீசார் விசாரணையில் தெரிந்துள்ளது. இதுதொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

CHELLA

Next Post

ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை 96 சதவீதம் பெய்யும்...!;

Sat Apr 15 , 2023
இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தென்மேற்குப் பருவமழை 96 சதவீதம் வரை பெய்யும் எனவும் குறைந்த மழைப்பொழிவு குறித்து விவசாயிகள் கவலையடையத் தேவையில்லை என்றும் மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் கூறியுள்ளார். மேலும் 2023-ம் ஆண்டு தென்மேற்குப் பருவமழை தொடர்பாக புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீண்டகால சராசரி அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளதாகவும், இதில் 5 சதவீதம் கூடுதல் அல்லது குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் […]
Rain 1

You May Like