தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி-யான ஜாங்கிட், ‘குலசாமி’ எனும் திரைப்படம் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.
சசிகுமார் நடிப்பில் வெளியான ‘குட்டிப்புலி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரவண சக்தி. இவர், தற்போது இயக்கி வரும் படம்தான் குலசாமி. இப்படத்தில் விமல், தன்யா ஹோப் மற்றும் வில்லனாக பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஜனனி பாலு நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த படத்தின் சிறப்பு என்னவெனில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். குலசாமி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரையிடலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தமிழ்நாடு முன்னாள் டிஜிபி ஜாங்கிட் நடித்துள்ளார்.
ஏப்ரல் 21ஆம் தேதி அன்று குலசாமி படம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நடிகர் விமல் மற்றும் முன்னாள் டிஜிபி ஜாங்கிட் உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் தியேட்டர்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. ‘போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ள குலசாமி படம் திரைக்கு வர உள்ளது. சிறுமிகளுக்கு நடக்கும் தொல்லைகள், அவர்களை காவல்துறை எப்படி காப்பாற்றுகிறது என்பதை மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் இயக்கப்பட்டுள்ளது’ என தனது சமூக வலைதள பக்கத்தில் ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.