பிஎஸ்எல்வி – சி 55 ராக்கெட் இன்று விண்ணில் பாய தயாராக உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனியார் செயற்கைக்கோள்களை ஒப்பந்த அடிப்படையில் விண்ணிற்கு அனுப்பி வருகிறது. இந்த வணிக ரீதியான ஏவுதல் பணிகளை இஸ்ரோவின் வணிகப்பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த அரசு நிறுவனம் தயாரித்துள்ள டெலியோஸ் 2 என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ இன்று விண்ணில் ஏவுகிறது. 741 கிலோ எடை கொண்டுள்ள இந்த செயற்கைகோள் பிஎஸ்எல்வி – சி 55 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இத்தோடு சேர்த்து 16 கிலோ எடை கொண்ட லூம்லைட் – 4 என்ற செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த 2 செயற்கைகோள்களும் கிழக்கு நோக்கி குறைந்த கோணத்தில் அமையும் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. பிஎஸ்எல்வி சி -55 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று நண்பகல் 02:19 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இதற்கான 25 மணி 30 நிமிட கவுண்ட் டவுன் நேற்று மதியம் 12:14க்கு தொடங்கியது.
இத்தோடு பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 4 வது தொகுதியில் போயம் – 2 என்ற பெயரிலான சோதனைக்கருவி இணைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திய பிறகு 4 வது தொகுதி சோதனை கருவியாக இயங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ‘போயம் – 2’ கருவியை இஸ்ரோ, இந்திய வான் இயற்பியல் நிறுவனம் உள்பட 4 நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி உள்ளன. இந்த ஏவுதலை பொதுமக்கள் நேரில் கண்டு களிக்கும் வகையில் இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது.