கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மைசூருவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் தர்மங்களில் ஒன்று சேவை என்பது. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணிக்குதான் மக்கள் வாக்களித்தனர். ஆனால் பண பலத்தால் பாஜக ஆட்சி அதிகாரத்தை பறித்துக் கொண்டது. மாநிலங்களுக்கான நிதியை பாஜக அரசு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குறைத்து வருகிறது. கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு உங்களை சூறையாடிவிட்டது.
பாஜக அரசானது கொரோனா நிதியை செலவிடவில்லை. பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தவில்லை. மாநில அரசு பணிகள் காலியாக இருக்கின்றன. இந்த நிதியும் வேலைவாய்ப்பும் உங்களுடையது என்பதை மறந்துவிடாதீர்கள். இடஒதுக்கீடு குறித்து பாஜக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. கர்நாடகா மக்களுக்கான இடஒதுக்கீடு அளவை பாஜக அதிகரிக்கவில்லையே ஏன்? அதிகாரத்தில் இருக்கும் வரை இதனை செய்யவில்லையே ஏன்? கர்நாடகாவின் பெருமைமிகு அடையாளமான நந்தினி பாலுக்கு மாற்றாக குஜராத்தின் அமுல் பால் நிறுவனத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் பால் உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழ்ந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களைப் பாருங்கள். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். ஏழைகளுக்கான 10 கிலோ இலவச அரிசியை காங்கிரஸ் ஆட்சி வழங்கும். பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 நிதி உதவி வழங்குவோம். பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்குவோம்” என்று பிரியங்கா காந்தி கூறினார்.