பழக்கடைகளில் ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்களுக்கு மேல் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும். ஆனால், அதற்கு என்ன காரணம் என்று பலருக்கும் தெரியாது. இருப்பினும் அதை நாம் பெரிதாக கவனிக்காமல் கடந்து சென்றுவிடுவோம். ஆனால் அதற்கு பின் ஒரு காரணம் உள்ளது என்பது தெரியுமா..? பழங்களில் உள்ள இந்த ஸ்டிக்கர்கள் தரத்தை குறிப்பதற்காக ஒட்டப்படலாம் என்று பலர் நினைக்கிறார்கள். அதுமட்டுமின்றி, இந்தப் பழங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கருதுவதுண்டு. உண்மையில் என்னதான் காரணம்..?
பழங்களின் தரம், விலை மற்றும் செயல்முறையைப் புரிந்துகொள்ள உலகின் பல்வேறு நாடுகளில் இத்தகைய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கூறுகிறது. ஆனால், இந்தியாவில் அப்படி எதுவும் விதிமுறைகள் இல்லை. அதற்கு மாறாக, பழங்களின் குறைபாடுகளை மறைக்க இப்படி ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. மற்றொரு காரணம் மற்ற பழங்களை விட ஸ்டிக்கர் ஒட்டிய பழம் சிறந்தது என்பதை போல் காட்டி சந்தையில் விற்பனை செய்ய இப்படியான யுத்தி பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளிலும் ஸ்டிக்கர் மூலம் நுகர்வோரை தவறாக வழிநடத்துவது நடப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அத்தகைய பசையில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களே பழத்தையும், அதன் தரத்தையும் பாதிக்கிறது. அதோடு அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.