ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் உள்ளிட்ட, பல்வேறு சாதனைகளை ராஜஸ்தான் வீரர் யஷஷ்வி ஜெய்ஷ்வால் தனதாக்கியுள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஜான்சென் வீசிய ஓவரில் முதல் சிக்சர் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்து பல சாதனைகளை படைத்தார் ராஜஸ்தான் வீரர் ஜெய்ஷ்வால். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை எட்டிய இந்திய வீரர் எனும் பட்டியலில், டெல்லி வீரர் பிரித்வி ஷா உடன் ஜெய்ஷ்வால் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் 34 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். அதன்படி, ஐபிஎல் தொடரில் வெறும் 31 இன்னிங்ஸ்களில் அவர்கள் 1000 ரன்களை எட்டியுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் மிக இளம் வயதில் 1000 ரன்களை கடந்த வீரர் எனும் பட்டியலில், ஜெய்ஷ்வால் இரண்டாவது இடம்பிடித்துள்ளார். அதன்படி, 21 வருடம் மற்றும் 130 நாட்கள் ஆன சூழலில், ஜெய்ஷ்வால் 1000 ரன்களை எட்டியுள்ளார். முன்னதாக டெல்லி வீரர் பிரித்வி ஷா 21 வயது 169 நாட்கள் எனும் சூழலில், ஆயிரம் ரன்களை கடந்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.ஐபிஎல் தொடரில் இளம் வயதில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் டெல்லி அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். அதன்படி, வெறும் 20 வருடங்கள் 218 நாட்களிலேயே ஐபிஎல் தொடரில் அவர் 1000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். அதேநேரம், நடப்பு தொடரில் அவர் விளையாடாதது குறிப்பிடத்தக்கது
நடப்பு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜெய்ஷ்வால், அதிரடியாக ரன் குவித்து வருகிறார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 477 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 124 ரன்களை குவித்துள்ளார்.