இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தானில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான், பாகிஸ்தானின் பிரதமராக இருந்த போது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப் பிரமுகரிடமிருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்த்த வழக்கு என 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக இம்ரான் கான் இஸ்லாமாபாத் வந்தார். அப்போது அவரை போலீஸார் கைது செய்தனர். இம்ரான் கானை சுற்றிவளைத்த அதிரடிப்பபடையினர் அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் நாடு முழுவதும் பெறும் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.
பாகிஸ்தானில் பல இடங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியது, இம்ரான் கானின் ஆதரவாளர்கள் போலீஸ் வாகனங்களை எரித்ததோடு, பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தி வருகின்றனர். கலவரத்தை கட்டுப்படுத்த இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.