தவறும் செய்யும் குழந்தைகளை நல்வழிப்படுத்த பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
குழந்தைகள் தவறு செய்தால் அதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அந்த சமயத்தில் ஒன்றும் கூற வேண்டாம். ஏனெனில் உறவுகளின் முன்னிலையில் தவறு இழைப்பதை பார்த்த பின்பும் நண்பர்களின் முன்பும் குழந்தைகள் தவறு இழைத்ததை தம்பட்டம் அடித்து அவர்களை அவமானப்படுத்த வேண்டாம். குழந்தைகளுடன் தனியாக நேரம் செலவழியுங்கள். அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்து சென்று தனிமையில் அவர்கள் செய்த தவறை எடுத்துக்கூறி அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று கூறி, அந்தத் தவறு சரியற்ற செயல் என்று அவர்களுக்கு அன்பாக எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள். அவர்கள் திரும்ப அதே தவறை செய்யாதவாறு கண்டிப்பான முறையில் அழைத்து பெற்றோரின் பெயரை கெடுக்க கூடாது, அவர்களின் நம்பிக்கையை உடைக்க கூடாது என்ற எண்ணத்தை அவர்களின் மனதில் வரவழைக்க வேண்டும். குழந்தைகள் நல்ல விஷயங்களை செய்யும் பொழுது மற்றவர்களுக்கு உதவும் பொழுது தனது திறமையை வெளிப்படுத்தும் போதும் இத்தகைய விஷயங்களுக்காக அவர்களின் மனம் திறந்து பாராட்டி பரிசுகளை அளியுங்கள்.
அவர்கள் நல்லது செய்தால் நல்லதே என்று சொல்லி வளருங்கள். குழந்தைகள் வளரும் பொழுது என்றோ செய்த தவறை, அந்த சமயத்தில் சொல்லி திருத்தாமல் திடீரென்று ஒரு நாள் அன்று நீ செய்த தவறு செய்தவன் அல்லவா என்று கூறி குழந்தையின் மனதை காயத்தை உண்டு செய்தால் அது உங்கள் மீது வெறுப்பை உண்டாக்கும். அதுமட்டுமில்லை மேலும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும். பெற்றோரான உங்களிடமிருந்து அதிகதூரம் பிரிந்தும் செல்லுவார்கள். குழந்தைகளுக்கு நல்லது எது, கெட்டது எது என்று தெளிவாக கற்றுக் கொடுங்கள். இந்த கற்பித்தலை கதைகள், படங்கள், பாடல்கள் மற்றும் தினசரி நிகழ்வுகள் மூலம் கற்பிக்க முயலுங்கள் இந்த அனைத்து விதமான கற்பித்தலும் குழந்தையின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு நான் நல்லதே கற்றுத் தரப் போகிறேன் என்று எல்லா விஷயங்களையும் ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக கூறி அவர்களை போர் அடித்து விடாதீர்கள். கொஞ்சம், கொஞ்சமாக ஒரு மணி நேரத்தில் ஒன்று என, ஒவ்வொன்றாக கற்பியுங்கள். நல்ல விஷயங்களை மட்டும் கற்பித்துக் கொடுத்து இருக்காமல், தீமை செய்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்றும் கற்பியுங்கள். குழந்தை செய்யும் தவறு நேரடியாக அவர்களிடம் கேட்டு கண்டிக்கும் முன் அதனை பழகி தந்த ஆணிவேர் யார், எந்த சூழல் என்பதை அறிந்து கொண்டு அவற்றை முதலில் நீக்க முயலுங்கள். பொறுமையாக அவர்கள் செய்த தவறை எடுத்துக் கூறி அதனை மீண்டும் செய்யாது இருக்கும் வகையில் அந்த தவறை நினைத்து மனம் திருந்தும் வகையில் சொல்லி புரியவையுங்கள்.
இவர்களுக்கு வாழ்க்கையில் நீதி, நேர்மை, அன்பு, பாசம் போன்ற விஷயங்களை எப்படி கடைபிடிக்க வேண்டும். அவற்றால் என்ன பலன் கிடைக்கும். வாழ்வில் கொள்கையுடன் வாழ்வதால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதையும் எடுத்துரைக்க வேண்டும். முக்கியமாக களவும் கற்று மற என்ற கூற்றை எடுத்துச்சொல்லி தவறிழைத்தால் இயல்பே, ஆனால் அதுவே என்றென்றும் தொடர்ந்து விடக்கூடாது என கூறுங்கள். மேலும் குழந்தைகள் பள்ளி, கல்லூரி, சமுதாயம் என அனைத்து இடங்களிலும் விதிக்கப்பட்டுள்ள விதிகளை மதித்து அவற்றை மீறாமல் தவறு செய்யாமல் அனைவருடனும் இணைந்து வாழவேண்டும் என்ற அத்தியாவசிய அடிப்படை கருத்தை கற்றுக்கொடுங்கள். இது தெரிந்தால் போதும் குழந்தைகளின் வாழ்வில் என்றும் தவறை செய்ய மாட்டார்கள்.