மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. மனமகிழ்ச்சியோடு நடந்துமுடிந்த நிச்சயதார்த்த விழாவிற்கு பிறகு, மணமக்களின் உறவினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது, பந்தியின் போது மணமகன் வீட்டார் மற்றும் மணமகள் வீட்டாரை சேர்ந்த இளைஞர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டை சேர்ந்தவர்கள் முதலில் லேசான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. லேசாக தொடங்கிய வாய் வார்த்தை, பின்னர் தகாத வார்த்தையில் திட்டும் அளவுக்கு சென்றுள்ளது. பெண் வீட்டாரை, மாப்பிள்ளை வீட்டார் தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் வாய்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.
இரண்டு வீட்டிலும் இளைஞர்கள் அதிகமாக இருந்ததால், இந்த சிறிய சண்டை பூதாகரமாக மாறியுள்ளது. இரண்டு வீட்டையும் சேர்ந்த இளைஞர்கள் மண்டப வாசலிலேயே ஒருவரை ஒருவர் மூர்க்கமாக தாக்கிக்கொண்டுள்ளனர். இளைஞர்கள் என தொடங்கிய இந்த சண்டை பெண்கள், ஆண்கள் என பெரிய சண்டையாக உருவெடுத்ததாக தெரிகிறது. இந்த சிறிய பிரச்சனை பெரியதாக மாறியதால் மணமகன் மற்றும் மணமகள் இரண்டு வீட்டாரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.