திருமணமான ஒரே மாதத்தில், சரியாக திட்டம் வகுத்து, கணவனைக் கத்தியால் குத்திக் கொன்ற புதுமணப்பெண், தன்னுடைய கணவரை முகமூடி கொள்ளையர்கள் கொன்று விட்டதாக நாடகமாடிய நிலையில் போலீசில் சிக்கியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் சுராஜ் ராஜேந்திரா. இவருடைய மனைவி அங்கிதா. இவர்களது திருமணம் பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த மாதம் திருமணமான நிலையில், தம்பதிகள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சென்று வந்தனர். அப்படி புனே மாவட்டத்தில் புறநகர் பகுதியில் உள்ள கோவிலுக்குச் சென்று தரிசனம் முடிந்த நிலையில், தங்களுடைய தோட்டம் அருகில் இருப்பதாக கூறி, கணவனை அழைத்துச் சென்றுள்ளார் அங்கிதா.
தோட்டத்திற்கு இருவரும் ஜோடியாக சென்ற நிலையில், அடுத்த சில மணி நேரம் கழித்து, தங்களை முகமூடி கொள்ளையர்கள் தாக்கியதாகவும், அதில் சுராஜ் உயிரிழந்ததாகவும் தனது தந்தைக்கு போன் செய்து கூறியுள்ளார் அங்கிதா. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அங்கிதாவின் தந்தை தோட்ட வீட்டுக்கு சென்றார். பின்னர், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுராஜின் உடலை மீட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு எவ்வித தடயமும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, சந்தேகத்தின் பேரில் அங்கிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கணவரை கொலைச் செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். திருமணமான சில தினங்களிலேயே சுராஜை பிடிக்காமல் போனதாகவும், திட்டம் போட்டு சம்பவத்தை நிகழ்த்தியதாகவும் கூறினார். இதனையடுத்து, அங்கிதாவை கைது செய்த போலீசார் இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.