ஷைட் ஸ்க்ரீனை சரிசெய்யும் படி ரசிகர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்ட நடுவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில், டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய இந்திய அணியில் அஜிங்கியா ரஹானே 89 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 51 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 48 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்தியா முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதன் பிறகு வந்த ஸ்டீவன் ஸ்மித் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்தார். அப்போது, போட்டியின் 21ஆவது ஓவரில் மைதானத்திற்கு வெளியில் அமர்ந்திருந்த ரசிகர்களால் ஷைட் ஸ்க்ரீன் பாதிப்பு ஏற்படவே, ஸ்மித் அவர்களை நகரும்படி நடுவரிடம் முறையிட்டார். இதையடுத்து நடுவரும் அவர்களை நகர்ந்து செல்லும்படி கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க, மைதானத்தில் பின்னாடியே வந்த முகமது ஷமி நடுவர் இருப்பது கூட தெரியாமல் அவர் மேல் மோதியுள்ளார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.