தற்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஏறக்குறைய அனைவரின் வீடுகளிலும் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை என்பது கணிசமாக கூடி வருகிறது. இதன் காரணமாக தான் முக்கிய சாலைகளின் ஓரம் பெட்ரோல்-டீசல் பங்க்குகள் அணிவகுத்து நிற்கின்றன.
இந்த பெட்ரோல் நிலையங்களில் நாம் பெட்ரோல், டீசல் நிரப்ப காசு கொடுக்க வேண்டும். ஆனால், பணம் கொடுக்காமல் அங்கு உள்ள 6 முக்கிய வசதிகளை நாம் இலவசமாக பெற முடியும். ஆம், இது முற்றிலும் உண்மை. இது நம்மில் சிலருக்கு தெரிந்து இருந்தாலும் கூட பலரும் இதுபற்றி அறிந்து கொள்ளாமல் இருக்கலாம். அவர்களுக்கான செய்தி தான் இது.
இந்த இலவச சேவைகள் என்பது மார்க்கெட்டிங் ஒழுங்குமுறை விதிகளின் படி அந்தந்த பங்க்குகள் கட்டாயமாக வழங்க வேண்டும். இந்த சேவைகளை வழங்க மறுத்தால் அந்த பங்க்குகளுக்கு எதிராக கூட புகார் அளிக்க முடியும். சரி, வாங்க பங்க்குகளில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பினாலும், நிரப்பாமல் இருந்தாலும் கூட மக்கள் இலவசமாக பயன்படுத்தக் கூடிய சேவைகள் என்னவென்று பார்ப்போம்.
முதல் வசதி : பெட்ரோல் பங்குகளில் காற்று நிரப்பும் எந்திரம் இருப்பதை நாம் பார்த்திருப்போம். நாம் பெட்ரோல், டீசல் நிரப்பினாலும், நிரப்பாவிட்டாலும் கூட நமது வாகனங்களின் டயர்களில் இருக்கும் காற்றின் அளவை அந்த எந்திரங்கள் மூலம் நம்மால் அளவீட்டு கொள்ளலாம். காற்று குறைவாக இருப்பின் இலவசமாக காற்றடித்து கொள்ள முடியும். இதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டாம். அதோடு அந்த பெட்ரோல் பங்கின் வாடிக்கையாளராக கூட நாம் இருக்க வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கத்தது.
2வது வசதி: பெட்ரோல், டீசல் நிரப்ப செல்லும்போது அதன் தரத்தை நீங்கள் பரிசோதிக்க விரும்பினால் தாராளமாக செய்யலாம். இதுபற்றி நீங்கள் ஊழியர்களிடம் சொன்னால் அவர்கள் ‘பில்டர்’ பேப்பர் சோதனை செய்து காட்ட வேண்டும். இது அடிப்படை விதியாகும். மேலும் பெட்ரோல், டீசலின் அளவு சரியாக இருக்கிறதா? என்பதையும் நாம் அறிந்து கொள்ள விரும்பினால் அதனையும் ஊழியர்கள் கூறலாம். இப்படி நாம் கேட்கும் பட்சத்தில் பங்க்குகளில் உள்ள ஒரு லிட்டர் கூம்பு வடிவ கலனில் பெட்ரோல், டீசலை பிடித்து அளவு சரியாக இருக்கிறதா? இல்லையா? என்பதை நம்மிடம் அவர்கள் உறுதி செய்து காட்ட வேண்டியது கட்டாயமாகும்.
3வது வசதி: பெட்ரோல் பங்குகளில் எப்போதும் முதலுதவி பெட்டி இருப்பது அவசியமாகும். இது அங்கு நடக்கும் விபத்துகளுக்கு மட்டுமே பயன்படுத்த கூடியது அல்ல. மாறாக நாம் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்களில் பயணம் செல்கிறோம். அப்போது ஏதாவது பிரச்சனையில் நாம் காயப்பட்டால் தாராளமாக பங்க்குகளில் ஊழியர்கள் உதவியுடன் முதலுதவி பெட்டியில் உள்ள மாத்திரை, மருந்துகளை நம்மால் இலவசமாக பயன்படுத்த முடியும். இதனால் பெட்ரோல் நிலையங்களில் முதலுதவி பெட்டிகளில் அதற்கான மாத்திரை, மருந்துகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என்பது அதன் உரிமையாளரின் கடமையாகும்.
4வது வசதி: நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வாகனத்தில் பயணம் செய்கிறீர்கள் என வைத்து கொள்வோம். அப்போது உங்களின் செல்போன் தொலைந்தாலோ இல்லை வேலை செய்யாவிட்டாலோ நீங்கள் தாராளமாக அவரச உதவி என்ற முறையில் பங்க்குகளில் உள்ள தொலைபேசியை பயன்படுத்தி கொள்ள முடியும். இதற்கும் நாம் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. அதோடு பெட்ரோல், டீசலை நிரப்பாமல் கூட அந்த பங்க்குகளில் இந்த சேவையை நம்மால் பயன்படுத்த முடியும்.
5வது வசதி: ஒவ்வொரு பெட்ரோல், டீசல் நிலையங்களில் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். இதற்கான ஏற்பாட்டை பங்க்குகளின் உரிமையாளர்கள் ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும். நாம் டிராவல் செய்யும்போது பெட்ரோல், டீசல் நிரப்பாமல் கூட பங்க்குகளுக்கு சென்று குடிநீர் குடிக்கலாம். நமக்கு தேவையான குடிநீரை கேன்களிலும் பிடித்தும் செல்லலாம்.
6வது வசதி: பயண நேரங்களில் கழிவறை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் அதிக சிரமங்களை சந்திக்கலாம். இத்தகைய சமயங்களில் ஆண், பெண் என யாராக இருந்தால் அருகே பெட்ரோல் நிலையங்களை பார்த்தால் எந்த தயக்கமும் இன்றி அங்கு சென்று கழிவறைகளை கட்டணம் ஏதுமின்றி பயன்படுத்த முடியும். ஏனென்றால் ஒவ்வொரு பெட்ரோல் நிலையங்களிலும் சமானியர்கள் பயன்படுத்தும் வகையில் ஆண், பெண்களுக்கு என தனித்தனியே தண்ணீர் வசதியுடன் கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த 6 வசதிகளையும் நாம் இலவசமாக ஒவ்வொரு பெட்ரோல், டீசல் நிரப்பும் நிலையங்களில் பெற முடியும். இதற்காக நாம் அந்த பங்க்குகளில் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டாம். அதோடு இந்த 6 வசதிகளை பெற நாம் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டாம் என்பதை மீண்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.