திருச்சி மாவட்டம் முசிறி அருகே சூரம்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு என தனியாக கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த ஜூன் 5ஆம் தே கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காகவும், கோயிலுக்கு வரி கொடுக்கவும் மே மாதம் இதே சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேர் முன்வந்தனர்.
ஆனால், இந்த இளைஞர்கள் வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்களை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளதால் வரி வாங்க முடியாது என்றும் கோயில் விழாவில் சேர்த்துக் கொள்ள முடியாது எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துவிட்டது. இது அந்த இளைஞர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
பின்னர், காதல் திருமணம் செய்த 5 இளைஞர்களும் இது குறித்து முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், முசிறி போலீசார், முசிறி வட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கோயில் கும்பாபிஷேகத்தில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் வழிபாடு செய்வதற்கு ஒப்புக் கொள்வதாகவும், பின்னர் நடைபெற உள்ள பூஜையில், உரிய சடங்குகளுக்கு பின்னர் அவர்களை சேர்த்துக் கொள்வதாகவும் கோயில் நிர்வாகம் கூறியது.
இதையடுத்து கும்பாபிஷேக விழாவில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர்கள் தங்களது மனைவி பிள்ளைகளுடன் கலந்து கொண்டனர். ஆனால், கோயிலில் தேங்காய் பழம் படைப்பதற்கு காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர்களின் குடும்பத்துக்கும் அனுமதி மறுத்தனர். இது தொடர்பாக மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக உடன்பாடு எட்டவில்லை.
ஆனால் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், வழிபாடு நடத்த அனுமதிக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். கோயில் தரப்பினர் ஆலோசித்து முடிவு சொல்வதாக கூறிவிட்டு சென்றனர். அடுத்த நாளே கோயிலில் தொடர்ந்து நடைபெற இருந்த பூஜைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் வழிபட எதிர்ப்பு தெரிவித்து கோயில் விழாக்களை ரத்து செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.