தமிழ்நாட்டில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போன நிலையில், மீண்டும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. விடா மழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிய நிலையில் தற்போது மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் பள்ளி கல்வித்துறை முக்கியமான ஒரு முடிவை விரைவில் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பள்ளிகள் மீண்டும் திறந்த பின் காலாண்டு தேர்வு வரை தொடர்ந்து சனிக்கிழமை பள்ளிகளை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ”ஏற்கனவே விடப்பட்ட விடுமுறைகளை கணக்கில் வைத்து சனிக்கிழமைகளில் கூடுதல் வகுப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். இப்போது மேலும் வரும் விடுமுறைகளை கணக்கில் வைத்து கூடுதலாக மேலும் சில சனிக்கிழமைகள் விடுமுறையை ரத்து செய்வோம். எவ்வளவு மணி நேரம் இழக்கப்பட்டு உள்ளதோ அதை வைத்து கூடுதல் சனிக்கிழமையை பணி நாட்களாக அறிவிப்போம் என்று கூறுகின்றனர்.