பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் செந்தில் பாலாஜியின் இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாகவும் உடனடியாக அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைத்தனர்.
அதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த 15ஆம் தேதி இரவு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். காவேரி மருத்துவமனையில் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், புதன்கிழமையன்று இதய நிபுணர் ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழு, செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரம் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. செந்தில் பாலாஜிக்கு நடைபெற்ற பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது. அறுவை சிகிச்சை முடிந்து 26 மணி நேரம் கடந்துள்ள நிலையில். அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இந்நிலையில், சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது, மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார் என்று கூறியுள்ளார். இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெண்டிலேட்டர் உதவியுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி 24 மணி நேரமாக சிகிச்சையில் உள்ளார். அறுவை சிகிச்சை நடைபெற்ற 24 மணி நேரத்திற்கு இதயத்திற்கு ஓய்வு தேவை என்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரத்திற்கு பிறகு செயற்கை சுவாசம் முழுவதுமாக நீக்கப்பட்டு இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார். செந்தில் பாலாஜியின் ரத்த ஆக்சிஜன் அளவு, இருதய துடிப்பின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மயக்க மருந்து முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வலி நிவாரணி மருந்து வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.