தென்காசி நடுமாதாங்கோயில் தெருவில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் சந்திரன்-சித்ரா தம்பதி கடந்த 10 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தனர். இந்நிலையில், வீட்டில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம்பக்கத்தில் வசித்து வருபவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தென்காசி போலீசார், துர்நாற்றம் வீசிய
வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, கட்டிலில் சித்ரா கட்டிவைக்கப்பட்ட நிலையில் முகம் சிதைவடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனே தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். அதனைதொடர்ந்து, அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன்-மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வந்த வீட்டில் மனைவி மட்டும் கை, கால்கள் கட்டப்பட்டு முகம் சிதைவடைந்த நிலையில் இறந்து கிடப்பதால், சித்ராவை அவரது கணவன் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கணவரான சந்திரனை தற்போது போலீசார் வலைவீசி தேடி வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.