கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாஸ். இவருக்கு சூரஜ் குமார் என்கிற மகன் உள்ளார். இவரும் தற்போது சினிமாவில் நடிக்க களமிறங்கியுள்ளார். சினிமாவுக்காக தனது பெயரை துருவன் என மாற்றிக்கொண்ட அவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அனூப் ஆண்டனி இயக்கிய இப்படம் சில பிரச்சனைகளால் ரிலீஸ் செய்யப்படவில்லை.
இதையடுத்து, ரதம் என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று மைசூரில் இருந்து உதகை செல்ல முடிவெடுத்த துருவன், பைக்கில் கிளம்பி இருக்கிறார். அப்போது பேகுர் அருகே மைசூரு – குண்ட்லுபேட் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது முன்னே சென்ற டிராக்டரை முந்த முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவரது பைக் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த நடிகர் துருவனை மீட்டு மைசூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், விபத்தில் சிக்கி பலத்த சேதமடைந்த துருவனின் வலது காலை அகற்றினால் தான் அவரை காப்பாற்ற முடியும் என சொல்லிவிட்டார்களாம். இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்து அவரது வலது கால் அகற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கி காலை இழந்துள்ளதால் சினிமாவில் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. கன்னட நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கி தனது வலது காலை இழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் துருவன் விரைவில் குணமடைய வேண்டி அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகர் துருவன், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.