செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறையை அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் நீலகண்டன் (35) இவர் பாஜகவின் உறுப்பினராக இருக்கிறார். அதோடு அந்த பகுதியில் அந்தக் கட்சியின் முக்கிய ஆதரவாளராகவும் காணப்படுகிறார்.
இந்த நிலையில் தான் கடந்த 24ஆம் தேதி அவருடைய இருசக்கர வாகனம் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த போது நள்ளிரவு நேரத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதுகுறித்து மர்ம நபர்கள் தன்னுடைய வாகனத்திற்கு தீ வைத்திருப்பதாகவும், மேலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் நீலகண்டன் புகார் வழங்கினார். மறுபடியும் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டின் வாசலில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றதாக சொல்லப்படுகிறது.
இதில் அந்த பகுதியில் இருந்த பேனர் தீ பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.