ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் விலையை மேலும் குறைக்க ஆலோசித்து வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்திட கூட்டுறவு சந்தை (COOP BAZAAR) செயலியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை செயலாளர் ஜகந்நாதன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், ”தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் வங்கி சேவை மற்றும் விவசாயத்துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மலிவான விலையில் நுகர்வோருக்கு கிடைக்கும் வகையில் எளிதாக இல்லங்களில் இருந்தவாரே செயலி மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். எளிய முறையில் குறைவான சேவைக் கட்டணத்துடன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
8 சங்கங்களின் 64 வகையான பொருட்கள் சந்தைப்படுத்தப்படவுள்ளன. செயலி மூலமாக பொருட்களை வாங்கலாம். நியாய விலைக்கடைகள் மூலமாக தேவையான அளவிற்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தேவைக்கேற்ப அடுத்தக்கட்ட விரிவாக்கம் செய்யப்படும். அகில இந்திய அளவில் தக்காளி விலையேற்றம் காணப்படுகிறது. தக்காளி விலையை குறைப்பதற்கு ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.