தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். அதன்படி, இந்தாண்டு சைக்கிள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக மாணவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் பள்ளிகளுக்கு உதிரி பாகங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இதை கோர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. குறைந்த மாணவ, மாணவியர் உள்ள இடங்களில் உதிரி பாகங்களை கோர்க்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன.
இன்னும் சில பள்ளிகளில் உதிரி பாகங்களை கோர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்ததும் தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் விரைவில் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் அடுத்த வாரம் சைக்கிள்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடை வெயில் மிக மோசமாக இருந்தது. எப்போதும் இருக்கும் கோடை காலம் போல இல்லாமல் மிக மிக மோசமாக கோடை வெயில் வாட்டி எடுத்தது.
இந்நிலையில் வெயில், மழைக்கு இடையே ஒருவழியாக பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வரும் நிலையில், தனியார் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கவனிக்க தொடங்கி உள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்காணிக்க தொடங்கி உள்ளனர். அதோடு இது தொடர்பாக பெற்றோர்கள் தங்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் அல்லது மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.
இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் பணி ஓய்வு பெற்ற 1,000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளிகள் இப்போதுதான் திறந்து உள்ளன. இந்த நேரத்தில் 1,000 ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் பல பள்ளிகளில் வகுப்புகள் எடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். முக்கியமாக பாடங்களை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். இதை தடுக்கும் விதமாக 1,000 ஆசிரியர்களுக்கும் மேலும் ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருக்கிறார்.
மேலும், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் நடைபெறும்போது, முதன்மை கல்வி அலுவலர்கள் நேரில் சென்று பயிற்சிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் ஆசிரியர்கள் பயிற்சி சரியாக வழங்கப்படுகிறதா என்று உறுதி செய்யப்படும். மேலும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி பள்ளிகளில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்.