நாகர்கோவில் அருகே 12ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (52). இவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக இருந்து வருகிறார். அவரது உறவினர் மகளான 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் தகாத முறையில் பழகி வந்துள்ளார். இந்நிலையில், மாணவி வழக்கம்போல பள்ளிக்கு சென்ற நிலையில், பள்ளியிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததோடு, மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சிவக்குமார் தான் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் சிவக்குமாரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.