மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் அடுத்த ஆண்டு முதல், எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வை அமல்படுத்த உள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, இத்தேர்வை கைவிடக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். நெக்ஸ்ட் தேர்வு கிராமப்புற, சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தனது கடிதத்தில் கூறியிருந்தார்.
நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை தேசிய மருத்துவ ஆணையம் ஒத்திவைத்தது. மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு எடுக்கும் வரை நெக்ஸ்ட் தேர்வு நடைபெறாது. மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்து அடுத்த அறிவுறுத்தல் வரும் வரை தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.