தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உதவி தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில் நிர்வாக காரணங்களுக்காக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அடுத்த மாதம் 26-ஆம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை நாளாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கான விண்ணப்பபதிவு முகாம்கள் தமிழ்நாடு அரசால் நடத்தப்படுகின்றன. இதனை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. மகளிரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற சிறப்பு முகாம்கள் நடத்த முதலமைச்சர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “வேண்டும் என்பது தொடர்பாக அறிவிப்பு ரேஷன் கடைகளில் ஒட்டப்படும். முதற்கட்ட விண்ணப்ப விநியோகம் நாளை தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து 16 ஆம் தேதி வரை நடைபெறும். முதல் கட்டத்தில் 98 வார்டுகளிலும் , 2 ஆம் கட்டத்தில் 102 வார்டுகளிலும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும், தேவையான விண்ணப்பங்கள் கையிருப்பில் உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளது. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்றால் கூட அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மண்டல் வாரியாக தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.