சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு பொறுப்பு நீதிபதியாக உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், சென்னை புழல் சிறையில் திடீர் சோதனையில் ஈடுபட்டார். பின்னர், புழல் சிறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சோதனை மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைய குழு உறுப்பினர் நசீர் அகமது, திருவள்ளுவர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி மற்றும் தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் பரிந்துரை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் தமிழ்நாடு அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். 6 வயது வரையிலான குழந்தைகள் சிறையில் தாயுடன் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், அந்த குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்குவதுடன், மழலையர் பள்ளிகளை துவங்க வேண்டும்.
நீதிமன்றம் ஜாமீன் அளித்தும் பிணைய தொகை செலுத்த முடியாத காரணத்தால் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் தனது பரிந்துரை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.