என்னுடைய குடும்பத்துக்கும், இந்த நாட்டுக்கும் தெரியாமல், எங்காவது போய்விட வேண்டும் என்று நினைக்கிறேன் என ஜி.கே.மணி வேதனை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “இதை நான் சொல்லக்கூடாது. வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என்று கூறிவிட்டுத்தான் சென்றோம். ஆனால், ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஆனால், அதுவே மிகப்பெரிய செய்தியாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை உண்மையாக இருக்க வேண்டும்.
ராமதாஸ் – அன்புமணி இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான முயற்சியையும் எடுத்து வருகிறேன். இடையில் பல நெருக்கடிகள் நிகழ்ந்து வருவது கஷ்டமாகவும், வேதனையாகவும் ருக்கிறது. ராமதாஸ் – அன்புமணி இடையிலான விரிசலுக்கு நான் தான் காரணம் என்று கூறுகிறார்கள். இதை எப்படி என்னால் தாங்கிக் கொள்ள முடியும். நான் அப்படியான மனிதனும் இல்லை. அந்த செய்தியை பார்த்து அழுதுவிட்டேன்.
பாமக நிறுவனர் ராமதாஸிடம் ஒருமுறை அல்ல, பலமுறை சொல்லிவிட்டேன். நான் தற்போது 2 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன். உங்களுக்கும், என் குடும்பத்துக்கும், இந்த நாட்டுக்கும் தெரியாமல், எங்காவது போய்விட வேண்டும். யார் கண்ணிலும் படாதபடி ஓடிப்போய்விட வேண்டும். இல்லையென்றால், நான் உயிரோடு இருக்கக்கூடாது. இந்த இரண்டுதான் என்னுடைய முடிவு என்ற நிலையில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஊடகத்தில் சொல்லக்கூடிய செய்தியா இது..? எனக்கு எவ்வளவு வேதனை இருந்தால், இப்படியெல்லாம் பேசுவேன். இதற்கெல்லாம் என்ன காரணம். எங்கள் கட்சியில் நடக்கக்கூடிய ஒவ்வொரு சம்பவமும் வேதனையாக இருக்கிறது” என்று பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.