80 மற்றும் 90-களில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ராஜசேகர். இவர், நடிகர் மட்டுமின்றி திரைப்பட இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த நிலையில், தாரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி காலமானார். இவருக்கு, சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான் இவருடைய கடைசியாக ஆசையாக இருந்தது.
ராஜசேகர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் லோன் போட்டு வடபழனியில் வீடு ஒன்றை வாங்கினார். ஆனால், அந்த வீட்டில் பால் காய்ச்சி குடியேறும் முன்பாகவே அவர் இறந்துவிட்டார். இதனால், அந்த வீட்டில் மனைவி தாரா மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் ஏதுவும் இல்லாத நிலையில், வங்கியில் வாங்கிய கடனை திரும்பக் கட்டச் சொல்லி தாராவிடம் வங்கி நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.
ஆனால், வருமானத்துக்கு வேறு வழி ஏதும் இல்லாததால், கடனை திரும்ப செல்ல அவகாசம் கேட்டுள்ளார் தாரா. மேலும், தங்களுக்கு வேறொரு சொத்து இருப்பதாகவும், அதை வைத்து கடனை அடைக்க முயற்சிப்பதாகவும் கூறி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை நீதிமன்ற ஊழியர்கள், தாராவுக்கு கடன் கொடுத்த வங்கி ஊழியர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் காவல்துறையின் பாதுகாப்புடன் தாராவின் வீட்டுக்கு வந்து வீட்டை சீல் வைக்கும் பணியை மேற்கொண்டார்களாம்.
அதாவது, வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால், இந்த வீட்டை வேறொருவருக்கு வங்கி விற்பனை செய்துள்ளது. இதனால், வீட்டை வாங்கிய நபர், நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீட்டைக் கையகப்படுத்தித் தரச் சொல்லி உத்தரவிட்ட நிலையில், அதிகாரிகள் வீட்டிற்கு சீல் வைக்க வந்தனர். இதுகுறித்து தாரா கூறுகையில், ”எனக்கு என்ன பண்றதுனே தெரியல. இன்னைக்கு நடுரோட்டுல இருக்கேன். எனக்கு நடிகர் சங்கம், டிவி நடிகர் சங்கம்னு யாராவது உதவி செஞ்சா நல்லா இருக்கும்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.