சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ராணுவ முகாம் மீது ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 9 வீரர்களை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிக்கிமின் லாச்சென் மாவட்டத்தில் உள்ள சாட்டனில் நேற்று மாலை 7 மணியளவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 6 வீரர்கள் இன்னும் காணவில்லை என்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் “ இந்திய ராணுவம் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது, துன்பங்களை எதிர்கொண்டபோதும் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு மற்றும் மீள்தன்மையை வெளிப்படுத்தியது,” என்று அவர் கூறியுள்ளார்..
4 பேர் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஹவல்தார் லக்விந்தர் சிங், லான்ஸ் நாயக் முனிஷ் தாக்கூர் மற்றும் போர்ட்டர் அபிஷேக் லகாடா ஆகிய 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. “மிகவும் சவாலான நிலப்பரப்பு மற்றும் பாதகமான வானிலைக்கு மத்தியில், காணாமல் போன 6 வீரர்களை மீட்பதற்காக மீட்புக் குழுக்கள் 24 மணி நேரமும் இடைவிடாமல் உழைத்து வருகின்றன,” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய ராணுவம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது. இந்த துயரமான நேரத்தில் துயரமடைந்த குடும்பங்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இயற்கையின் சீற்றத்தை எதிர்கொண்டாலும், தனது தளராத மனப்பான்மையையும், கடமைக்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி, தனது அனைத்து பணியாளர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்வதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது,” என்று ராணுவம் தெரிவித்துள்ளது..
சிக்கிம் மழை
வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக அசாமில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 78,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சாலைப் போக்குவரத்து, ரயில் மற்றும் படகு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே போல, அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை வடக்கு சிக்கிமின் பல்வேறு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பிரதான சாலை போக்குவரத்து தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 1,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கி தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.