நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாநகர் மாவட்ட தலைவர் கண்ணன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் இருந்தனர். அதைத்தொடர்ந்து மாநில கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்த கோ.தமிழரசன் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி வெளியேறினார்.
பின்னர், நாதக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் பரவியது. அதை உறுதிப்படுத்தும் வகையில் நாதக.வில் இருந்து விலகுவதாக கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி காளியம்மாள் அறிவித்தார்.இந்த நிலையில் சேலம் நாம் தமிழர் கட்சியின், சேலம் மாநகர் மாவட்ட தலைவர் கண்ணன், விலகுவதாக தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் கடந்த, 2010 முதல் கட்சியில் எந்தவித எதிர்பார்ப்பும், சுயநலமும் இல்லாமல், இடைவிடாது கட்சியின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் தொடர்ந்து களப்பணியாற்றி வந்தேன். ஆனால், சீமான் தற்போது எடுத்து வருகின்ற முடிவுகள், அறிவிப்புகள் களத்தில் உண்மையாக உழைத்தவர்களுக்கும், களத்தின் முன்னோடிகளையும், உதாசீனப்படுத்துவதாகவும், புறக்கணிக்கப்படுவதாகவும் உள்ளது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்போது கட்சியிலிருந்து விடுவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Read More: அதிமுக மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கம்..!! – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு