கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால், மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர். புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்றனர். அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக ஆசிரியர்கள் இனிப்பு வழங்கினர்.
பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதேபோல் பள்ளி வேலை நாட்கள், விடுமுறைகள், தேர்வுகள் குறித்த அட்டவணை 2025-26ஐ பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிட இருக்கிறது.
இந்நிலையில் தான், செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “ஆண்டுதோறும் ஏதோ ஒரு வகையில், 3 அல்லது 4 மாத கால தாமதத்திற்கு பின், 13 வகை கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இம்முறை ரூ.1,141 கோடி மதிப்பிலான உபகரணங்களை, பள்ளி துவங்கிய நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
புதிய கல்விக்கொள்கையில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடாததால் கட்டாயக் கல்வி சட்டத்தின்கீழ் ஏழை குழந்தைகளுக்கான 25% இடஒதுக்கீட்டிற்கான பங்கை ஒதுக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்தது. இந்த திட்டப்படி அரசு கல்விக்கட்டணம் செலுத்தாத காரணத்தால், இடஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் அமல்படுத்தவில்லை. இதனால், ஏழை குழந்தைகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் வர வேண்டிய ரூ.600 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்காமல் உள்ளது. இதுதொடர்பாக நேரடியாகவே வலியுறுத்தியுள்ளோம். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்து, மத்திய அரசிடம் இருந்து பணம் வந்ததும், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுவர். அதேபோல், மாநில கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை முதல்வரிடம் உள்ள நிலையில், அவர் விரைவில் வெளியிடுவார்” என்று தெரிவித்தார்.