தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி 20,508 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், சுமார் 1.85 கோடி பேர் பயணம் செய்கின்றனர். மேலும், இந்த பேருந்துகளுக்கு தினமும் 17 லட்சம் லிட்டர் டீசல் போடப்படுகிறது. ஆனால் டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வால் செலவு அதிகரித்துள்ளது. தினசரி வருவாய் ரூ.39 கோடியாக உள்ள நிலையில், செலவு மட்டுமே ரூ.58 கோடி ஆகிறது. இதனால், மாதம் ரூ.600 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.
அரசுப் பேருந்துகளுக்கான அதே கட்டணத்தில் தான் 4,700 தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. எனவே, டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பேருந்து கட்டணத்தை உயர்த்த அரசுக்கு உத்தரவிட வேண்டுமென தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்த உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து இன்று விளக்கம் அளித்துள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்படாது” என்று அறிவித்தார். பேருந்து கட்டணம் குறித்து வெளியாகி வரும் செய்திகள், வெறும் வதந்தியே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், நீதிமன்ற உத்தரவுப்படியே, தனியார் பேருந்துகளில் கட்டணங்களை உயர்த்துவதற்கு மக்களிடம் கருத்து கேட்பதாக விளக்கம் அளித்துள்ளார்.